திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 6:47 PM GMT)

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

திருவாரூர்

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் கோபால், சிவாராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:- அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் போன்ற 520 பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சியில் அமர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

குறுவை சாகுபடி பொய்த்துள்ளது

கால்வாய்கள், ஆறுகள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்லவில்லை. இதனால் குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. குறுவை பொய்த்து விட்ட நிலையில் சம்பா சாகுபடியாவது நடைபெறுமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு தரவேண்டிய 27 டி.எம்.சி. காவிரி நீரை கொடுத்தால் தான் பெங்களூருவில் நடக்கும் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று தெரிவிக்காமல், அந்த கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார். அங்கு முதல்-அமைச்சர் காவிரி நீர் குறித்து வாய் திறக்காமல் தமிழகம் திரும்பி வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

காய்கறிகளை மாலையாக அணிந்திருந்தனர்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் விலை உயர்வை கண்டித்து காய்கறிகளை மாலையாக அணிந்திருந்தனர். இதில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சின்னராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் ெரயில் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.


Next Story