சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு
x

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை குழு ஆய்வு செய்ய தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று கூறியதால் குழுவினர் திரும்பிச் சென்றனர்.

சிதம்பரம்,

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி நடராஜரை தரிசனம் செய்ய தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதை அறிந்த தமிழக அரசு, கோவில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்தது. இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே கோவிலை சட்ட விதிகளின்படி தீட்சிதர்கள் நிர்வாகம் செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க இந்து சமய அறநிலையத்துறை கடலூர் துணை ஆணையர் ஜோதியை தமிழக அரசு நியமித்தது.

நோட்டீசு

மேலும் இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் ஜூன் மாதம் 7 மற்றும் 8-ந்தேதிகளில் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்ய வருவார்கள் என்றும், அன்றைய தினம் கோவில் வரவு-செலவு கணக்குகளை காண்பிக்க வேண்டும் என்றும் தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீசு வழங்கியது.

இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்ததோடு, கோவில் வரவு-செலவு கணக்குகளை கேட்க அரசுக்கு உரிமை இல்லை என்று பதில் நோட்டீசு அனுப்பினர்.

ஆய்வு செய்ய வந்த குழு

இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி சுகுமார் தலைமையிலான குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு செய்வதற்காக நேற்று காலை 10 மணிக்கு சென்றனர். முதலில் அந்த குழுவினர், கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசனம் செய்தனர். பின்னர் 2014-ம் ஆண்டு முதல் வரவு-செலவு கணக்குகள், திருப்பணி குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றை தீட்சிதர்களிடம் கேட்டனர்.

தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு

அப்போது வரவு-செலவு கணக்குகளை காட்ட தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். மேலும் அவர்கள், நடராஜர் கோவிலை ஆய்வு செய்ய நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை. உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி ஆய்வுக்கு வந்திருக்க வேண்டும். இந்த ஆய்வு சட்ட விதிமுறையை பின்பற்றாமல் நடப்பதாக கூறி, 6 பக்க விளக்க அறிக்கையை வக்கீல் சந்திரசேகரன் மூலம் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறை குழுவினரிடம் வழங்கினர்.

திரும்பிச்சென்ற குழு

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் கோவிலின் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்யவில்லை. மாறாக கோவில் உள் மற்றும் வெளி பிரகாரங்களை பார்வையிட்ட குழுவினர் மதியம் 1 மணி வரை கோவிலில் இருந்து திரும்பிச் சென்றனர். பின்னர் மாலை 5.10 மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை குழுவினர் மீண்டும் நடராஜர் கோவிலுக்கு வந்து ஆய்வு சம்பந்தமாக தீட்சிதர்களிடம் பேசினர். அப்போது தீட்சிதர்கள், சட்டப்பூர்வமாக ஆய்வு செய்ய வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்றனர். இதையடுத்து குழுவினர் நாளை(அதாவது இன்று) மீண்டும் ஆய்வு செய்ய வருவதாக கூறிவிட்டு மாலை 6 மணிக்கு திரும்பிச்சென்றனர்.


Next Story