தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

ஆபத்தான புளியமரம்

கரூர் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே மெயின் ரோட்டின் ஓரத்தில் உள்ள புளியமரத்தில் பெரிய அளவிலான துவாரம் ஏற்பட்டு, அந்த புளியமரம் எந்த நேரத்திலும் தார் சாலையில் விழும் நிலையில் உள்ளது. சாலையில் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த புளியமரம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, கந்தம்பாளையம்.

பாதுகாப்பற்ற மின்சாதன பெட்டி

கரூர் மாவட்டம், பாலத்துறையை அடுத்த கூலக்கவுண்டனூரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி அருகே மின்கம்பம் நடப்பட்டு அந்த மின் கம்பத்திலிருந்து மின்மோட்டாருக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு அங்குள்ள ஆழ்துளை கிணற்றிலிருந்து அருகாமையில் உள்ள குடிநீர் தொட்டிக்கு குடிநீர் செல்கிறது. இந்நிலையில் மின் மோட்டாருக்கு மின்வினியோகம் செல்வதற்காக பொருத்தப்பட்டுள்ள மின்சாதன பெட்டி பாதுகாப்பு அற்ற நிலையில் திறந்தே இருக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கூலக்கவுண்டனூர்.

பட்டுப்போன மரத்தால் நோயாளிகள் அச்சம்

கரூர் மாவட்டம், நச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கும் மேற்ப்பட்ட புறநோயாளிகள், கர்ப்பிணிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வந்து செல்கின்றனர். அவர்களை அச்சுறுத்தும் வகையில் மருத்துவமனைக்கு அருகில் காய்ந்து பட்டுப்போன மரம் ஒன்று உள்ளது. பலத்த காற்று அடிக்கும்போது இந்த மரம் முறிந்து விழும் நிலையில் உள்ளதால், நோயாளிகள் நடமாட்டத்தின் போது விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நச்சலூர்.

வீணாகும் குடிநீர்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருங்களாப்பள்ளியில் இருந்து திம்மம்பட்டி செல்லும் சாலையில் கணக்கப்பிள்ளையூர் பகுதியில் சாலையின் நடுவே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பல நாட்களாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கருங்கலாப்பள்ளி.

பயன் இல்லாத மின்கம்பம்

கரூர் மாவட்டம், பரமத்தி வேலூர்- கொடுமுடி நெடுஞ்சாலையில் உள்ள பாலத்துறை அருகே கூலக்கவுண்டனூர் மெயின் ரோட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தில் இருந்து அருகாமையில் உள்ள வீடுகளுக்கும், கடைகளுக்கும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதன் காரணமாக அருகாமையில் புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. புதிய மின்கம்பம் நடப்பட்டு சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் பழைய மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகளை புதிய மின்கம்பத்தில் இணைக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழரசன், பாலத்துறை.


Next Story