தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குடிநீர் குழாயில் உடைப்பு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகே விருத்தாச்சலம் சாலை வளைவில் சாலையின் அருகே அமைக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அடிக்கடி மின்தடை

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது சேலத்தார் காடு கிராமம். இந்த கிராமத்தில் அதிக அளவில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊர் வழியாக பல்வேறு கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வெளியூருக்கு கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் நடந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் தேக்க தொட்டிக்கு தென்புறத்தில் செல்லும் மின் கம்பிகளுக்கு நடுவே இடையூறாக பனை மரத்தின் பச்சை மட்டைகள் உரசுவதாலும், மின்கம்பிகள் காற்றில் ஒன்றோடொன்று உரசுவதாலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அடிப்படை வசதிகள் இல்லாத சந்தை

அரியலூர் நகர சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த நகர சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் மழை பெய்யும் போது, சேறும், சகதியமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிழற்குடை அமைக்க வேண்டும்

அரியலூர் சாவடிக்காட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பஸ் ஏறி செல்ல வேண்டும் என்றால் சாவடிகாட்டிற்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரிது அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தனியார் பள்ளி அருகே பஸ்கள் நின்று செல்லும் வகையில், நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார சீர்கேடு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா நகர் பகுதியில் ஏராளமாக பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை கிளறுவதினால் அவற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story