தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

நோயாளிகள் அவதி

அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த நிலையில் இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் நோயாளிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள மின்விசிறிகள் இயங்கவில்லை. இதனால் வெயிலின் தாக்கத்தின் காரணமாக நோயாளிகள் காற்று வசதி இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோயாளிகள், அரியலூர்.

சுத்தம் செய்யப்படாத தண்ணீர் தொட்டி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு காந்திநகரில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது நீர்த்தேக்க தொட்டிக்கு மேலே ஏற அமைக்கப்பட்டுள்ள படிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

லோகநாதன், காந்திநகர்.

போக்குவரத்து நெரிசல்

அரியலூர் நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது குறிப்பாக அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை குறுகிய பகுதியாகும். இங்கு அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும் பஸ் நிலையத்திலிருந்து தேரடி வரை திருச்சி, பெரம்பலூர், திட்டக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் தனியார் பஸ்கள் பஸ் நிறுத்தங்கள் இல்லாத பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் சில தனியார் நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் முதன்மை சாலையிலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைகளுக்கு சென்றுவிட்டு நீண்ட நேரம் கழித்து வருகின்றனர். மேலும் இவ்வழியாக தினமும் அடிக்கடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு 108 ஆம்புலன்சில் விபத்தில் அடிபட்ட நபர்கள், கர்ப்பிணிகள், வயதான நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து சிகிச்சை அளிக்க முடியாமல் போக்குவரத்து இடையூறில் சிக்கி விடுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், அரியலூர்.


Next Story