தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நடவடிக்கை தேவை

விருதுநகர் அருகே குல்லூர்சந்தை கிராமத்திலிருந்து கூரைக்குண்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள பெரும்பாலான மின்கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் ஒருவித அச்சம் அடைகின்றனர். எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாராயணன், குல்லூர்சந்தை.

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் காமராஜர் பைபாஸ் சாலையில் இருந்து அல்லம்பட்டி முக்கு வரை உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நாகராஜ், விருதுநகர்.

மாசடைந்து வரும் நீா்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் கன்னார்பட்டிகாலனி பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இப்பகுதியின் மையப்பகுதியில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரே இப்பகுதி மக்களின் நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது கிணற்றில் குப்பைகள் சூழ்ந்து தண்ணீர் மாசடைந்து வருகிறது. மேலும் கிணற்றின் ஆபத்தை அறியாமல் சிறுவர்கள் அதன் அருகில் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே கிணற்றை சுத்தப்படுத்தி வலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொன்னுச்சாமி, ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஆக்கிரமிப்பு

விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக காணப்படுவது கண்மாய் பாசனமே. மாவட்டத்தில் பல கண்மாய் தற்போது பெய்த மழையின் காரணமாக நிறைந்துள்ளன. சில கண்மாய்களில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாயை ஆக்கிரமித்த கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகணபதி, விருதுநகர்.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் வாகனஓட்டிகள் பயணிப்பதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நகரின் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜேம்ஸ், அருப்புக்கோட்டை.

சுகாதார சீர்கேடு

விருதுநகரில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் நுழைவு வாயில் பகுதியில் சிலர் குப்பைகளை வீதிகளில் போட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதி சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது. எனவே இங்கு குப்பைகள் வீசி செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், விருதுநகர்.

நாய்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சாலையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்துவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரிமுத்து, தம்பிபட்டி.

போக்குவரத்திற்கு இடையூறு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஸ் நிலையம் பகுதியில் தினமும் ஏராளமான பயணிகள் பயணிக்கின்றனர். இங்கு சிலர் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் நடைபாதையினர் மற்றும் வாகனஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாண்டியன், ராஜபாளையம்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழிக்கு குறிப்பிட்ட அளவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பஸ்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆதலால் பயணிகள் மாற்று பஸ் வரும் வரை காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், திருச்சுழி.

பொதுமக்கள் அவதி

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், தாயில்பட்டி.


Next Story