2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்படுக்கைகள் கண்டுபிடிப்பு


2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புதிய கற்படுக்கைகள் கண்டுபிடிப்பு
x

திருப்பரங்குன்றம் மலையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் மலையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மலையில் ஆய்வு

திருப்பரங்குன்றம் மலையில் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்படுக்கைகள் பாறை இடுக்குகளில் இருப்பதை கண்டறிந்தார். அதனைத்தொடர்ந்து வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் செல்லபாண்டியன், முனீஸ்வரன் மற்றும் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மருதுபாண்டியன் ஆகியோர் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு கற்படுக்கைகளை ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் வரலாற்று ஆர்வலர் அருண் சந்திரன் கூறியதாவது:-

மதுரையில் கி.மு.3 நூற்றாண்டு லிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை சமணம் செல்வாக்குப் பெற்று இருந்துள்ளது. மதுரையை சுற்றிலும் உள்ள திருப்பரங்குன்றம், அழகர் மலை, கீழக்குயில்குடி, மாங்குளம் உள்ளிட்ட பெருங்குன்றங்களில் சமணம் செழித்து இருந்ததற்கான சான்றுகள் ஏற்கனவே கிடைத்துள்ளது.

புதிய கற்படுக்கைகள்

மேலும் திருப்பரங்குன்றம் மலையில் ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் புதிய கற்படுக்கைகள் கிடைத்துள்ளன. மற்ற கற்படுக்கைகளை போல இவையும் கி.மு.2 மற்றும் 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஏற்கனவே உள்ள கற்படுக்கைகளில் கி.மு. 2 மற்றும் 3-ம் நூற்றாண்டைச்சேர்ந்த 2 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள கற்படுக்கைகளில் கல்வெட்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. சைவம் போன்று சமணமும் உருவ வழிபாட்டுக்கு திரும்பிய காலத்தினை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு சமணம் சார்ந்த அடையாளங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story