ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு


ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 1 July 2023 6:30 PM GMT (Updated: 3 July 2023 5:28 AM GMT)

உடையார்பாளையம் பகுதியில் ரேஷன் கடைகளில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அரியலூர்

தமிழக அரசு உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர், மேலூரில் உள்ள ரேஷன் கடைகளின் செயல்பாட்டினை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது த.பொட்டகொல்லை கூட்டுறவு ரேஷன் கடை, தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடைகளை பார்வையிட்டு பொருள் இருப்பு பதிவேடு, பொருள் வினியோக பதிவேடு, மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, வரவு, இருப்பு, விற்பனை குறித்த விவரங்கள், விற்பனை புத்தகம், ரேஷன் கடை திறக்கும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ரேஷன் கடை பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து சரியான நேரத்திற்கு வினியோகிக்கவும், பொருட்கள் இருப்பை தொடர்ந்து உறுதிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, தத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை நேரில் பார்வையிட்டு சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். பின்னர், த.மேலூர் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு பதிவேடுகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் அங்கன்வாடி மையத்தினை தொடர்ந்து தூய்மையாக பராமரிப்பதுடன், குழந்தைகளுக்கு உணவினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடர்ந்து தயாரித்து வழங்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது தாசில்தார் துரை, வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


Next Story