குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை


குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை
x
தினத்தந்தி 4 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 6:46 PM GMT)

குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமை தாங்கி நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை கேட்டறிந்ததோடு அதனை விரைந்து முடிக்கும்படி ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பார்த்திபன், உமாசங்கர், மித்ரன், சிங்காரவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கூறியதாவது:-

தீவிர ரோந்துப்பணி

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட வேண்டும். குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்க பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருந்தால் உடனே அவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டும்.

அதுபோல் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புக்கம்பிகள் அமைத்து சீரான வேகத்தில் வாகனங்கள் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாலியல் சம்பந்தமான புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

வாகன சோதனை

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தலை தடுக்க அனைத்து சோதனைச்சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து, மதுபாட்டில்கள் கடத்தல், சாராய விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்களை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அதுபோல் தொடர்ந்து ரவுடியிச செயல்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தி வரும் வாகனங்கள், நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு வாகனங்கள் ஆகியவற்றின் பராமரிப்புத்தன்மை குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story