தி.மு.க. அமைச்சர்களை கண்டித்துஇந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி:பா.ஜ.க.வினர் 118 பேர் கைது

தேனியில், தி.மு.க. அமைச்சர்களை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் 118 பேரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி, தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பா.ஜ.க.வினர் அறிவித்தனர். இதற்காக பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலிநரசிங்க பெருமாள், பா.ஜ.க. ஆன்மிகம் மற்றும் ஆலயமேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் நேற்று பழனிசெட்டிபட்டி பஸ் நிறுத்தம் அருகில் திரண்டனர்.
அங்கிருந்து முற்றுகையிட ஊர்வலமாக அவர்கள் புறப்பட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் தடையைமீறி போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 118 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்டவர்கள் ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.