பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்யவேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்


பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்யவேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்
x

சென்னையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை கைது செய்யவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அரசாங்க அலுவலக பணிகளில் தலையிடுவது, அரசு ஊழியர்களை மிரட்டுவது, பொதுமக்களை மிரட்டுவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது என்ற வரிசையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாருக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கும் நிலைக்கு தி.மு.க.வினர் சென்றுவிட்டார்கள். கடந்த 1½ ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை.

மாறாக, சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் புகலிடமாக தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

பாலியல் தொந்தரவு

சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பஸ்நிறுத்தம் அருகே தி.மு.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், "கல்லூரிக்கு கனவுடன் செல்கிற மாணவ-மாணவிகளுக்கு ஒரு தந்தையாக, ஒரு சகோதரராக தி.மு.க. ஆட்சி விளங்குகிறது" என்று மேடையில் பேசப்பட்டுக்கொண்டிருந்தபோது, 129-வது வட்ட தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தொல்லை கொடுத்த தி.மு.க.வினரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் ஆளும் கட்சியினரின் தலையீட்டை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் விட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

கைது செய்யவேண்டும்

தி.மு.க.வினரின் இந்த அராஜக போக்கு கடும் கண்டனத்துக்கு உரியது. குற்றம் செய்வோரை விடுவித்து விடுவது என்பது குற்றங்களை அதிகரிக்க வழிவகுக்கும். இதன்மூலம், கடந்த 1½ ஆண்டு காலமாக சீரழிந்து கொண்டு வருகின்ற சட்டம்-ஒழுங்கு மேலும் சீரழியக்கூடும். மேலும், பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை விடுவிப்பது என்பது பாலியல் குற்றத்துக்கு தி.மு.க. அரசு துணை போவதற்கு சமம். தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வது போல் அமைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகின்ற சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தி.மு.க.வினரை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கவும், தமிழகத்தில் ஊடுருவியுள்ள சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தலைவன் கஞ்சிபாணி இம்ரான் மற்றும் அவரது கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நாடு கடத்தவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story