மோசமான வானிலையால் வாழும்கலை ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் கடம்பூர் வனப்பகுதியில் தரை இறங்கியது


மோசமான வானிலையால் வாழும்கலை ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் கடம்பூர் வனப்பகுதியில் தரை இறங்கியது
x
தினத்தந்தி 25 Jan 2023 7:30 PM GMT (Updated: 25 Jan 2023 7:31 PM GMT)

கடம்பூர் வனப்பகுதியில் தரை இறங்கியது

ஈரோடு

மோசமான வானிலையால் வாழும்கலை ரவிசங்கர் வந்த ஹெலிகாப்டர் கடம்பூர் வனப்பகுதியில் தரை இறங்கியது.

ஹெலிகாப்டர் தரையிறங்கியது

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைக்கிராமம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமடித்தபடி இருந்தது. திடீரென அந்த ஹெலிகாப்டர் பயங்கர சத்தத்துடன் அவசர அவசரமாக தரை இறங்க கீழ்நோக்கி வந்தது. பின்னர் ஊகியம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாக மைதானத்தில் தரை இறங்கியது.

சத்தம் கேட்டு அருகே உள்ள வீடுகளில் இருந்தவர்கள் பதற்றத்துடன் வெளியே வந்து பார்த்தனர். ஹெலிகாப்டர் அருகே பெங்களூரு வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுவான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நின்று கொண்டிருந்தார். உடன் அவரது உதவியாளர்கள் சிலரும் வந்திருந்தனர். ஹெலிகாப்டர் பள்ளிக்கூட மைதானத்தில் திடீரென தரை இறக்கப்பட்டதால் ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர்.

ஆன்மிக நிகழ்ச்சி

இதற்கிடையே இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் வேகமாக பரவியது. வேடிக்கை பார்ப்பதற்காக சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே இதுபற்றி கடம்பூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து பார்த்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரித்தனர். இதில் அந்த ஹெலிகாப்டரில் பெங்களூரு வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் பெங்களூருவில் இருந்து திருப்பூரில் நடக்கும் ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு சென்றது தெரிய வந்தது.

கடும் பனிமூட்டம்

கடம்பூர் மலைப்பகுதியின் மேலே ஹெலிகாப்டர் பறந்து சென்றபோது வானத்தில் கடும் பனிமூட்டம் நிலவியதால் மேகமூட்டமாக காணப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக வழிப்பாதை சரியாக தெரியவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க என்ன செய்வதென்று பைலட் திகைத்திருந்தார்.

அப்போது கீழே ஒரு பெரிய மைதானத்தை பார்த்தார். உடனே அங்கு ஹெலிகாப்டரை பாதுகாப்பாக தரைஇறக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து ஹெலிகாப்டரை அவசர அவசரமாக கீழே இயக்கியபடி வந்து மைதானத்தில் தரை இறக்கியுள்ளார்.

இதையொட்டி போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். யாரையும் ஹெலிகாப்டர் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. பகல் 11.15 மணி அளவில் பனி மூட்டம் மெல்ல மெல்ல விலகி வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது

இதைத்தொடர்ந்து வானிலை சீரானதால் ரவிசங்கர் மற்றும் அவரது உதவியாளர்கள் ஹெலிகாப்டரில் ஏறினர். அதன்பின்னர் பைலட் மீண்டும் ஹெலிகாப்டரை இயக்க, அங்கிருந்து ஹெலிகாப்டர் வானிலை மார்க்கமாக திருப்பூர் நோக்கி சென்றது.

மோசமான வானிலை காரணமாக பைலட் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனே ஹெலிகாப்டரை மைதானத்தில் தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூருவில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக கடம்பூர் மலைப்பகுதியில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story