நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது


நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாததால்  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 21 Nov 2022 7:30 PM GMT (Updated: 21 Nov 2022 7:30 PM GMT)

பவானிசாகர் அணை

ஈரோடு

நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்தின் உயிர் நாடியாகவும் இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் கீழ்பவானி வாய்க்கால் வழியாக ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதேபோல் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

நீர்வரத்து குறைந்தது

இந்தநிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்யாததால் நீர் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 700 கன அடியாக இருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,094 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 104.18 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story