தசரா திருவிழா இன்று நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு களைந்தனர்


தசரா திருவிழா இன்று நிறைவு: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு களைந்தனர்
x

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுகிறது. இதையொட்டி விரதம் இருந்து வேடம் அணிந்த பக்தர்கள் காப்பு களைந்தனர்.

குலசேகரன்பட்டினம்,

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் கோவிலில் தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தசரா விழாவையொட்டி பல்வேறு நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காப்பு, பல்வேறு வேடங்கள் அணிந்து, ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலித்தனர்.

ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள்அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலித்தனர்.

சூரசம்ஹாரம்

இந்த நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் இரவில் குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர்.

காப்பு களைந்தனர்

விழாவின் 11-ம் நாளான நேற்று காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடியிறக்கப்பட்டது.தொடர்ந்து அம்மனின் காப்பு களையப்பட்டது. பின்னர் வேடம் அணிந்த பக்தர்களின் காப்புகளை கோவில் அர்ச்சகர்கள் களைந்தனர். இரவில் சேர்க்கை அபிஷேகம் நடைபெற்றது.

இன்று நிறைவு

12-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story