படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

படித்த வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

உதவித்தொகை

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடம் இருந்து வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து கடந்த 30-ந் தேதி நிலையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருக்கக்கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம்.

வருமான உச்சவரம்பு

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு ஏதும் கிடையாது. மற்ற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.9.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலை வாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது https://tnvelaivaaippu.gov.in/downloads/uaApplication.pdf என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கால அவகாசம்

இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்து மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள், இதற்கு விண்ணப்பிக்க தேவையில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம். மேலும் உதவித்தொகை பெற்று வரும் பயன்தாரர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க அடுத்த மாதம் 31-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story