1 லட்சம் பேர் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் -அமைச்சர்கள் மூர்த்தி, கணேசன் ஆலோசனை


மதுரை மாவட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

மதுரை


மதுரை மாவட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்கும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

முன்னேற்பாடு பணிகள்

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை ஒருங்கிணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ், கலெக்டர் அனிஷ்சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் சண்முகசுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின் அமைச்சர்கள் மூர்த்தி, கணேசன் ஆகியோர் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை 69 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை எப்போது நடத்துவது என்பது அறிவிக்கப்படும்.

வடமாநிலத்தவர்கள்

இந்த முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 1 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பார்கள். இந்த முகாம் மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் குறைந்தது ரூ.15 ஆயிரம் சம்பளம் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்ற சொல்லே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தோடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.. வடமாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களில் தமிழக தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் என எந்த வேற்றுமையும் பார்க்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story