மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 7 Oct 2022 6:45 PM GMT (Updated: 7 Oct 2022 6:46 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலியானார்.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பழனி என்பவருடைய மகன் இசைராஜா (வயது 24). இவர் என்ஜினீயரிங் படிப்பு முடித்துவிட்டு, தற்போது சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இசைராஜா தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் இவரும், அதே ஊரைச் சேர்ந்த முருகேஷ் (19) என்பவரும் சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு பாவூர்சத்திரத்தில் உள்ள நண்பர்களை பார்க்க திருச்சிற்றம்பலத்தில் இருந்து மேலப்பாவூர் வழியாக பாவூர்சத்திரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

மேலப்பாவூரை அடுத்துள்ள கால்வாய் அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் இசைராஜா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முருகேஷ் பலத்த காயங்களுடன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களை பார்க்கச் சென்ற வாலிபர், மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திருச்சிற்றம்பலம் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story