போலீஸ் பாதுகாப்புடன் மாலையில் நடந்த கிராமசபை கூட்டம்


போலீஸ் பாதுகாப்புடன் மாலையில் நடந்த கிராமசபை கூட்டம்
x

செய்யாறு அருகே தலைவர், உறுப்பினர்கள் வராததால் காலையில் நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே தலைவர், உறுப்பினர்கள் வராததால் காலையில் நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் மாலையில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

கிராமசபை கூட்டம்

செய்யாறு தாலுகா இளநீர்குன்றம் கிராம ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இதில் பலராமன் தலைவராகவும், சங்கீதா துணைத்தலைவராகவும் உள்ளனர்.

இந்த ஆண்டு கிராமசபை கூட்டத்தை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். அதற்கு அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி சுழற்சி முறையில் நடத்தப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராம சபை கூட்டம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நடத்தப்படும் என்று கிராமம் முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

யாரும் வரவில்லை

அதன்படி நேற்று காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடத்த அப்பகுதி மக்கள் தயாராக இருந்தனர். கூட்டம் நடத்த தலைவரோ, துணைத்தலைவரோ வார்டு உறுப்பினர்களோ யாரும் அப்பகுதிக்கு வரவில்லை. இந்த நிலையில் அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி மற்றும் குப்புசாமி கூட்டம் நடத்த யாரும் வராததால் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதையடுத்து கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை சரிவர செய்யவில்லை என ஊராட்சி செயலாளர் துலுக்கானம் மீது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ஊராட்சி செயலாளர் துலுக்கானம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து மாலை 4 மணி அளவில் கூட்டம் தொடங்கியது.

போலீஸ் பாதுகாப்பு

அப்போது அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிராம சபை கூட்டம் நடந்தது.கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் பலராமன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சங்கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு உறுப்பினர் லட்சுமி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் அப்பகுதி பொதுமக்கள் காலை அறிவித்தபடி 11 மணியளவில் கூட்டம் ஏன் நடத்தவில்லை, கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய பதிவேடுகளை ஏன் கொண்டு வரவில்லை என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீர்மானங்கள்

இதையடுத்து ஊராட்சி தலைவர் பேசுகையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என ஏற்கனவே தெரிவித்து விட்டேன் என்றார். தொடர்ந்து ஊராட்சி செயலாளர் துலுக்கானம் பொது மக்களின் கோரிக்கையை கேட்டறிந்து தீர்மான பதிவேட்டில் பதிவு செய்தார்.

கூட்டத்தில் இளநீர் குன்றம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல், டாக்டர் அம்பேத்கர் இரவு பாடசாலை அமைத்தல், நடமாடும் ரேஷன் கடை அமைத்தல், சிப்காட் விரிவாக்கத்திற்கு இளநீர் குன்றம் ஊராட்சி பகுதியில் விவசாய நிலம் எடுக்க அனுமதிக்க மாட்டோம். இளநீர் குன்றம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மினி டேங்க் அமைத்தல், விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போலீஸ் பாதுகாப்புடன் கிராமசபை கூட்டம் நடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story