தலைவாசல் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை-அண்ணன் மகன் கைது


தலைவாசல் அருகே நிலத்தகராறில் விவசாயியை அடித்துக்கொன்ற அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

தலைவாசல்:

விவசாயி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கோவிந்தம்பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பூசமுத்து (வயது 85). விவசாயி. இவரது அண்ணன் முத்துசாமி. இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு உடல்நலம் சரி இல்லாததால் முத்துசாமி இறந்து விட்டார். முத்துசாமியின் மகன் ராஜி (52).

இதனிடையே நேற்று முன்தினம் அங்குள்ள நிலத்தில் பூசமுத்து ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜி, நிலப்பிரச்சினை தொடர்பாக பூசமுத்துவிடம் பேசினார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

சாவு

தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ராஜி, பூசமுத்து கையில் வைத்திருந்த கைத்தடியை பிடுங்கி சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த பூசமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூசமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தலைவாசல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நிலத்தகராறில் விவசாயியை அண்ணன் மகனே அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story