விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரம்


விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 24 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 6:45 PM GMT)

கோத்தகிரி பகுதியில் காய்கறிகள் பயிரிட இயற்கை உரம் கலந்து விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் காய்கறிகள் பயிரிட இயற்கை உரம் கலந்து விளைநிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காய்கறி விவசாயம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் விவசாயம் பிரதானமாக உள்ளது. விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். மேலும் இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் அறுவடை செய்த விளைநிலங்களில் மீண்டும் விவசாயம் செய்யாமல், விவசாயிகள் தரிசாக விட்டு வைத்திருந்தனர். இந்தநிலையில் வருகிற ஜனவரி மாதம் முதல் மீண்டும் விவசாயம் மேற்கொள்வதற்கு ஏதுவாக விளைநிலங்களை தயார் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் மண்ணை உழுது பதப்படுத்தி வருவதுடன், இயற்கை உரங்களை மண்ணுடன் கலந்து மீண்டும் விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விளைச்சல் அதிகரிக்கிறது

இதுகுறித்து கோத்தகிரி பாண்டியன் பூங்கா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, பலத்த மழையின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் கடந்த ஒரு மாதமாக விவசாயம் செய்யாமல் இருந்தோம். இந்தநிலையில் ஜனவரி மாதம் முதல் மீண்டும் விவசாயம் செய்ய உள்ளதால், மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டி, ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை சாண உரங்களை வாங்கி விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகிறோம். இயற்கை உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால் காய்கறி விளைச்சல் அதிகரிக்கிறது.

ஒரு லாரி சாண உரம் ரூ.30 ஆயிரம் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு ஒன்று முதல் 3 லாரி சாண உரம் தேவைப்படும். இது மட்டுமின்றி காளான் வளர்ப்பு குடில்களில் வீணான காளான் எரு ஒரு டன் ரூ.1,300-க்கு வாங்கி, அதில் உள்ள இயற்கை எருவையும் விவசாயத்திற்கு பயன்படுத்துகிறோம். தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன என்றார்.


Next Story