மீன்கள் வளர்க்கும் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


மீன்கள் வளர்க்கும் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

சிறிய குளங்கள் அமைத்து மீன்கள் வளர்க்கும் திட்டத்திற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் மாநில அரசு நிதி பங்களிப்புடன் கூடிய பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ் சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளர்ப்பு செய்யும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு 3 சென்ட் நிலம் போதுமானது.

சொந்தமாக நிலம் உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் திட்ட செலவின தொகை ரூ.7 லட்சத்து 50 ஆயிரத்தில் பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியம் என ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படும்.

பட்டியல் பிரிவினர்களுக்கு 60 சதவீதம் மானியம் என ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் உடனடியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ, அலுவலக தொலைபேசி எண் 0416- 2240329, செல்போன் எண் 9384824248 மூலமாகவோ, adfifVellore@gmail.com மூலமாகவோ தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story