50 சதவீத மானியத்தில் பசுமைக்குடில், நடமாடும் காய்கறி வண்டி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


50 சதவீத மானியத்தில் பசுமைக்குடில், நடமாடும் காய்கறி வண்டி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் பசுமைக்குடில், நடமாடும் காய்கறி வண்டி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்

காய்கறி நாற்றுகள்

தேசிய தோட்டக்கலை இயக்க திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 7,268 எண்ணிக்கையிலும், எக்டேர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.796 லட்சமும் பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளன.

மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக நீர் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில், பசுமைக்குடில், நிலப்போர்வை போன்றவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

நடமாடும் காய்கறி வண்டி

தேனீ பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் வயலில் விளையும் விளை பொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீத மானியத்தில் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக 25 மெட்ரிக் டன் (1 யூனிட்) கொண்ட குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50 சதவீத மானியத்தில், பணி முடித்தவுடன் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டு பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

காய்கறி மற்றும் மலர்களை இருப்பு வைத்து வினியோகிக்க 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்சாதன அறை அமைப்பதற்காக மானியம் வழங்கப்பட உள்ளது. ஏழை மற்றும் நிலமற்ற பயனாளிகளுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வதற்காக நடமாடும் காய்கறி வண்டி 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story