உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள்


உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள்
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:45 PM GMT)

வேதாரண்யத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் சாகுபடி

காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமாக நாகை மாவட்டம் உள்ளது. இங்கு மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. நிலத்தடி நீர் ஆதாரம் குறைவு என்பதால் ஆற்றில் வரும் தண்ணீர் மற்றும் மழைநீரை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகிறார்கள். ஆண்டு முழுவதும் ஆற்றில் நீர் வரத்து இருந்தால் தான் நாகை மாவட்ட விவசாயிகள் சம்பா, தாளடி, குறுவை என 3 போகம் நெல் சாகுபடி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் நடப்பு சம்பா பருவத்தில் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. தற்போது இந்த பகுதியில் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன.

ரூ.1,800 கட்டணம்

கருப்பம்புலம், வடமழை மணக்காடு, கரியாப்பட்டினம், பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதிகளில் எந்திரம் மூலம் அறுவடை நடைபெறுகிறது. கடந்த ஆண்டு அறுவடைக்கு போதுமான எந்திரம் வராததால் ஒருமணி நேரத்திற்கு ரூ.2,100 கட்டணம் செலுத்தி அறுவடை நடைபெற்றது. இந்த ஆண்டு அறுவடை எந்திரம் கூடுதலாக வந்துள்ளதால் தற்போது ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,800 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உடனுக்குடன் கொள்முதல்

இந்த ஆண்டு நெல் விளைச்சல் நன்றாக இருப்பதாகவும், வேதாரண்யம் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கிய நிலையில் ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டை வரை நெல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

அறுவடை செய்த நெல்லை காலதாமதம் இல்லாமல் உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story