கும்மிடிப்பூண்டி அருகே பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


கும்மிடிப்பூண்டி அருகே பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கும்மிடிபூண்டி அருகே பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அருகே அம்பாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கலாதேவி (வயது 26). டாக்டர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கலாதேவி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரெயில்வே ஸ்டேஷன் தெருவில் உள்ள தனியார் கிளினிக்கில் கடந்த 8 மாதங்களாக டாக்டராக வேலை செய்து வந்தார். மேலும் அந்த கிளினிக் எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் மாடியில் வாடகைக்கு தனி அறை ஒன்றை எடுத்து அங்கு வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் அவர் கிளினிக்கில் நோயாளிகளை பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென தனது அறைக்கு சென்று விட்டு வருவதாக அங்கு இருந்த நர்சுகளிடம் கூறிவிட்டு சென்றார்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் வராதது கண்ட நர்சுகள் கிளினிக்கின் எதிர்புறம் மாடியில் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு இருந்த மின்விசிறியில் சேலையால் கலாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவ இடத்தில் இருந்து போலீசார் டாக்டர் கலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் கலாதேவியின் செல்போனை பறிமுதல் செய்து போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பெண் டாக்டரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியாத நிலையில் கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story