பெண் சரமாரி வெட்டிக்கொலை


பெண் சரமாரி வெட்டிக்கொலை
x

ஒட்டன்சத்திரம் அருகே பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

பெண் கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (50). இவர்களுக்கு சந்தானகிருஷ்ணன் (29) என்ற மகனும், வீரமணி (27) என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் ஆறுமுகமும், விஜயலட்சுமியும் மட்டும் கொசவபட்டியில் வசித்து வந்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக ஆறுமுகத்திற்கும், விஜயலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆறுமுகம் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி விஜயலட்சுமி கண்டித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஆறுமுகம், மனைவி என்று பாராமல் விஜயலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விஜயலட்சுமி துடிதுடித்து இறந்துபோனார்.

கணவர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த அம்பிளிக்கை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். மனைவியை கணவனே வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story