கேரளாவில் இருந்து குமரி வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை


கேரளாவில் இருந்து குமரி வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோரிடம் ‘தெர்மல் ஸ்கேனர்' மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

நிபா வைரஸ் பரவலை தடுக்க கேரள எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோரிடம் 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

நிபா வைரஸ் பரவல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குமரி எல்லையில் கண்காணிப்பு

அதன்படி குமரி மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதாவது களியக்காவிளை, கோழிவிளை, காக்காவிளை, பளுகல் மற்றும் நெட்டா சோதனைச்சாவடிகளில் தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.களியக்காவிளை சோதனைச்சாவடியில் சுகாதார ஆய்வாளர்கள் ஸ்ரீகுமார், கிருஷ்ணகுமாரி, அஜித் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று கேரளாவில் இருந்து வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

'தெர்மல் ஸ்கேனர்' பரிசோதனை

அப்போது தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருக்கிறதா? என பரிசோதனை செய்தனர். இந்த அறிகுறி இருந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி நிபா வைரஸ் இருக்கிறதா? என்று சோதனை நடத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தவிர பஸ்களில் வரும் பயணிகள், கேரளாவுக்கு சென்று பணிபுரியும் குமரி மாவட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களையும் கண்காணித்து உரிய பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story