மீன் உற்பத்தியை 22 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம்


மீன் உற்பத்தியை 22 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம்
x

வருகிற 2024-25-ம் ஆண்டில் மீன் உற்பத்தியை 22 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் கூறினார்.

தஞ்சாவூர்


வருகிற 2024-25-ம் ஆண்டில் மீன் உற்பத்தியை 22 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் கூறினார்.

கருத்தரங்கு

தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தில், மீன் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் தொடக்கவிழா நேற்றுகாலை நடந்தது.இதற்கு தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்கினார். வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்கத்தின் இயக்குனர் ஸ்டீபன் சம்பத்குமார் வரவேற்றார். விழாவில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் லோகநாதன் கலந்து கொண்டு பேசினார்.

அயிரை மீன் வளர்ப்பு

தொடர்ந்து அயிரை மீன் வளர்ப்பு குறித்தும், கூண்டுகளில் மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்தும் காணொலிக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது. மேலும் மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கான செல்போன் ஆப் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு குறித்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மீன் வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர். வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.பின்னர் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தூத்துக்குடி, பொன்னேரி, முட்டுக்காடு ஆகிய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 7 வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த 7 மையங்களிலும் ஒவ்வொரு வகையான மீன்கள் குறித்த ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய செயலி

மேலும் மீன் வளர்ப்பவர்கள், மீன் பண்ணை தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில், மீன் குறித்த 7 ஆய்வகங்கள், 3 நடமாடும் நோய் கண்டறியும் ஆய்வகங்கள், 4 மூலக்கூறுகள் கண்டறியும் ஆய்வகங்கள், மீன் உணவுப் பொருள் ஆய்வகங்கள், மீன் தீவன தர பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளது. இதை குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். மீன் வளர்ப்பில் நோய் கண்டறிவது மிக முக்கியமான ஒன்று.இதற்காக பல்கலைக்கழகம் சார்பில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நோய்கள் குறித்த சந்தேகங்களை மீன் வளர்ப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும். இன்றைய காலகட்டத்தில் மீன் வளர்ப்பில் அதிக அளவில் தீவனத்திற்காக செலவழிக்கப்படுகிறது. அதை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து முட்டுக்காடு மீன் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் புதிய ரக தீவனங்களையும் வெளியிட்டுள்ளோம்.வருகிற 2024-25-ம் ஆண்டில் மீன் உற்பத்தியை 22 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகப்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்வது போல மீன் வளர்ப்பு விவசாயிகளும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு படிப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு என அரசு அறிவித்துள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story