ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
x

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி

பென்னாகரம்:

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழை

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் தொட்டபெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பு

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள், நடைபாதை, மாமரத்துக்கடவு பரிசல் துறை உள்ளிட்டவைகள் தண்ணீரில் மூழ்கின.

குறிப்பாக ஐந்தருவிகளை மூழ்கடித்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளப்பெருக்கால் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசித்த மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு

மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஆலம்பாடி, ஊட்டமலை, நாகர்கோவில், முதலைப்பண்ணை, அருவிக்கு செல்லும் நடைபாதை உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்கவேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story