பூக்கள் விலை உயர்வு


பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 11 Feb 2023 6:46 PM GMT)

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மல்லிகை கிலோ ரூ.2,200-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மல்லிகை கிலோ ரூ.2,200-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு பல இடங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அவற்றை வாங்கி செல்ல தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். மக்களின் தேவையை பொறுத்தும் பூக்களின் வரவை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும்.

தோவாளை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ரூ.1,300 விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.900 உயர்ந்து ரூ.2,200-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.2,000-க்கு விற்பனையான பிச்சிப்பூ நேற்று ரூ.2,150-க்கும், ரூ.1,750-க்கு விற்பனையான முல்லை நேற்று ரூ.2000-க்கும் விற்பனையானது.

விலை விவரம்

தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.130, சம்பங்கி ரூ.150, கனகாம்பரம் ரூ.600, வாடாமல்லி ரூ.60, துளசி ரூ.40, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.25, கோழிப்பூ ரூ.60, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.160, ஸ்டெம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.400, மஞ்சள் கேந்தி ரூ.55, சிவப்புக்கேந்தி ரூ.60, சிவந்தி மஞ்சள் ரூ.70, சிவந்தி வெள்ளை ரூ.100, கொழுந்து ரூ.70, மருக்கொழுந்து ரூ.100 என விற்பனையானது.

காரணம் என்ன?

பூக்களின் விலை உயர்வு குறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறியதாவது:- தை மற்றும் மாசி மாதங்களில் கேரளாவில் கோவில் விழாக்கள் தொடர்ந்து நடைபெறும். எனவே பூக்களை வாங்கி செல்ல கேரள வியாபாரிகள் அதிக அளவில் வருவார்கள். இதனால் இந்த மாதங்களில் பூக்களின் விலை உயர்வாக இருக்கும்.

மேலும் தற்போது முகூர்த்த தினத்தைெயாட்டியும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம் பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. இதனால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story