திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்க வேண்டும்


திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்க வேண்டும்
x

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.6 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.6 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று சி.என்.அண்ணாதுரை எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை ரெயில் நிலையம் மேம்படுத்தும் பணி முதற்கட்டமாக ரூ.2½ கோடியிலும், 2-ம் கட்டமாக ரூ.2 கோடியிலும் நடந்து வருகிறது.

இதன் மூலம் திருவண்ணாமலை ரெயில் நிலைய முகப்பு பகுதியை கோவில் கோபுரம் வடிவில் அமைத்தல் பணிகளும், பயணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தென்னக ெரயில்வே ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை வலியுறுத்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை-திண்டிவனம் ரெயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்திற்கு தற்போது ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது போதுமானதாக இல்லை. எனவே இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றும் வகையில் நிதியை ஒதுக்கி பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புதிய வழித்தடம் அமைத்தால் ஆன்மிக நகரான திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் பெரும் பயன் பெறுவார்கள்.

ரூ.6 கோடி நிதி ஒதுக்க வேண்டும்

அதே போல் புதுச்சேரி-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தென் மாநிலங்களையும், வட மாநிலங்களையும் இணைக்கும் ரெயில் சேவையாக உள்ளது. ஆனால் இந்த சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் 13 ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்கிறது. எனவே திருவண்ணாமலையில் இந்த ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால் வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் ஆன்மிக பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்.

திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 2 கட்டங்களாக ரூ.4½ கோடியில் நடந்து வருகிறது. எனவே, திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள ரூ.6 கோடி நிதி அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும்.

திருவண்ணாமலை வழியாக செல்லும் காட்பாடி- விழுப்புரம் ரெயில் பாதையை இருவழிப்பாதையாக தரம் உயர்த்த வேண்டும். இதன் மூலம் இந்த வழிதடத்தில் ரெயில் சேவைகள் அதிகரிக்கும்.

இவ்வாறு அண்ணாதுரை எம்.பி. பேசினார்.


Next Story