எட்டயபுரம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை


எட்டயபுரம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:45 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி எட்டயபுரம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

பொங்கல் பண்டிகையையொட்டி எட்டயபுரம் சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

ஆட்டு சந்தை

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டு சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டு சந்தையும் ஒன்றாகும். விவசாயிகளிடம் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவார்கள்.

வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டு சந்தைக்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், ெநல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். சாதாரண வாரங்களில் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனையாகும். ஆனால் பண்டிகை காலங்களில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை நடைபெறும்.

ரூ.4 கோடிக்கு விற்பனை

இந்த நிலையில் பொங்கல் பண்டிைக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று எட்டயபுரம் ஆட்டு சந்தை நடைபெற்றது. இதற்காக ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவே சந்தையில் குவிந்தனர்.

நேற்று அதிகாலையில் இருந்தே ஆடுகள் விற்பனை நடைபெற்றது. விவசாயிகள் ஏராளமான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அவற்றை வியாபாரிகள், பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். எடைக்கு ஏற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.4 கோடி வரை ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story