உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை


உளுந்தூர்பேட்டை சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 6 July 2022 6:09 PM GMT (Updated: 6 July 2022 6:11 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன் கிழமை அன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று புதன் கிழமையையொட்டி வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெற்றது. ஆனால் வருகிற 10-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதால், வழக்கத்தை விட நேற்று விற்பனைக்காக விவசாயிகள் அதிக அளவில் ஆடுகளை வாரச்சந்தைக்கு கொண்டு வந்தனர்.

5 ஆயிரம் ஆடுகள்

இதையடுத்து சென்னை, திருச்சி, கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகின. ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரம் வரை விற்பனையானது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை செய்ய மற்றும் வாங்க அதிக அளவில் விவசாயிகள், வியாபாரிகள் குவிந்ததால் நேற்று வாரச்சந்தை பரபரப்புடன் காணப்பட்டது.


Next Story