அரசு பஸ் டிரைவர் மனைவி கட்டையால் அடித்துக்கொலை

ஒரத்தநாடு அருகே அரசு பஸ் டிரைவரின் மனைவியை கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் உத்திராபதி. அரசு பஸ் டிரைவரான இவரது மனைவி மல்லிகா(வயது 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மல்லிகாவிற்கும் அதே ஊரை சேர்ந்த உறவினரும், கூலித்தொழிலாளியுமான சங்கர்(50) என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி ஆவணி ஞாயிற்றுக்கிழமையன்று கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
கட்டையால் அடித்துக்கொலை
இதனைத்தொடர்ந்து அன்று மாலை மீண்டும் சங்கருக்கும்- மல்லிகாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சங்கர், கட்டையால் மல்லிகாவை தாக்கினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த மல்லிகாவை அவரது குடும்பத்தினர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மல்லிகா சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமி கும்பிடும் தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.