அரசு ஊழியர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்


அரசு ஊழியர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் -ஓ.பன்னீர்செல்வம்
x

அரசு ஊழியர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியில் இருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், மத்திய அரசு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி அதனை 1-7-2021 முதல் ரொக்கமாக மத்திய அரசு வழங்கியது. இதனை பின்பற்றி, மாநில அரசு ஊழியர்களுக்கு 1-7-2021 முதல் வழங்கப்பட வேண்டிய 14 சதவீத அகவிலைப்படி உயர்வு, 1-01-2022 முதல் தான் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கியது. அதாவது, 6 மாத காலத்திற்கு 14 சதவீத அகவிலைப்படி வழங்கப்படவில்லை.

தற்போது, மத்திய அரசு 1-7-2022 முதல் 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த முறையாவது 4 சதவீத அகவிலைப்படி உயர்வை 1-7-2022 முதல் ரொக்கமாக தி.மு.க. அரசு வழங்கும் என்று எதிர்பார்த்த மாநில அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை தொடர்ந்து காலந்தாழ்த்தி வழங்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது. முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 4 சதவீத அகவிலைப்படி உயர்வை, 1-7-2022 முதல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story