ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் இழந்த பட்டதாரி தற்கொலை


ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் இழந்த பட்டதாரி தற்கொலை
x

நெல்லை அருகே, ஆன் லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார். தோட்டத்துக்கு சென்று விஷம்குடித்து பரிதாப முடிவை தேடிக்கொண்டார்.

திருநெல்வேலி

பணகுடி:

நெல்லை அருகே, ஆன் லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சத்தை இழந்த பட்டதாரி தற்கொலை செய்து கொண்டார். தோட்டத்துக்கு சென்று விஷம்குடித்து பரிதாப முடிவை தேடிக்கொண்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பட்டதாரி

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த ஸ்ரீரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் பாஸ்கர், விவசாயி. இவருடைய மகன் சிவன்ராஜ் (வயது 34). பி.ஏ. பட்டதாரி.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி என்ற ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து விளையாட தொடங்கி உள்ளார். அப்போது ஆன்லைன் விளையாட்டில் சிறு, சிறு தொகையை வென்று வந்துள்ளார்.

கடன் வாங்கி விளையாடினார்

இதன்பிறகு சில நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய தொகையை வைத்து விளையாடிதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் சிவன்ராஜ் தன்னுடைய மொத்த தொகையையும் இழந்துள்ளதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் தான் விட்ட பணத்தை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடினார். அதில் ரூ.3 லட்சம் இழந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

அதன்பின்னர் சிவன்ராஜ் தான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாததால் மனமுடைந்தார்.

இந்தநிலையில் தனது ஊரின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்று குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் நேற்று கிடந்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று அவரை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் பரபரப்பு

இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவன்ராஜ் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆன் லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பட்டதாரி வாலிபர் தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story