உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம் மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக் கொலை


உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம்  மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக் கொலை
x

உளுந்தூர்பேட்டை அருகே மளிகைக்கடை உரிமையாளர் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

மளிகைக்கடை உரிமையாளர் மாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செம்மணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சந்தோஷ்குமார் (வயது 34). அதே ஊரில் மளிகைக்கடை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இவர், அருகே உள்ள நகர் கிராமத்திற்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறி சென்றார். அதன்பிறகு அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தோஷ்குமாரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை.

இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் மாயமான சந்தோஷ்குமாரை கண்டு பிடித்து தரக்கோரி உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை தேடி வந்தனர்.

எரித்துக் கொலை

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் நேற்று மாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை பார்வையிட்டதோடு, அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் மாயமான நபர்கள் குறித்து விசாரித்தனர். அப்போது இறந்து கிடந்தவர் உளுந்தூர்பேட்டை போலீஸ் சரகத்துக்குட்பட்ட செம்மணங்கூரை சேர்ந்த மாயமான மளிகைக்கடை உரிமையாளர் சந்தோஷ்குமார் என்பதும், அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து சந்தோஷ்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story