டிராக்டர் மோதி புதுமாப்பிள்ளை பலி


டிராக்டர் மோதி புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:47 PM GMT)

ேகாட்டூர் அருகே சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு வந்த போது டிராக்டர் மோதி புதுமாப்பிள்ளை பலியானார்.

திருவாரூர்

கோட்டூர் அருகே சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு வந்த போது டிராக்டர் மோதி புதுமாப்பிள்ளை பலியானார்.

புதுமாப்பிள்ளை

தஞ்சை மாவட்டம் வடசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது37). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சரண்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

புதுமாப்பிள்ளையான ரகுபதி நேற்று மாலை திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தானில் உள்ளது தனது சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

டிராக்டர் மோதியது

கோட்டூர் அருகே மறவாதி என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த டிராக்டர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ரகுபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருகவாழ்ந்தான் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ரகுபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகம்

தனது சகோதரிக்கு பொங்கல் சீர்வரிசை கொடுத்து விட்டு திரும்பி வந்த போது விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story