கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா


கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
x

கரூர் மாவட்ட கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்

கரூர் வெண்ணைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பிரசித்தி பெற்ற ஆத்ம நேய ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு தயிர், இளநீர், திருநீறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

இதேபோன்று தாந்தோணிமலை மில்கேட் பகுதியில் ஆஞ்சநேயர் வெண்ணெய், சந்தனம் உள்ளிட்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதேபோன்று தாந்தோணிமலை பஸ் நிலையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் 1,008 வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நொய்யல்

புன்னம் ஊராட்சியில், குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விநாயகர் பூஜை, யாக சாலை பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது. பின்னர் தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அனுமந்தராய சுவாமிக்கு, வெண்ணை சாத்தி, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் அனுமந்தராயசுவாமி (ஆஞ்சநேயர்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வெள்ளியணை

வெள்ளியணை அருகே பச்சப்பட்டியில் பழமையான பால ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அனுமனுக்கு இளநீர், பால், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அனுமனுக்கு வெற்றிலை, துளசி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

வேலாயுதம்பாளையம்

தோட்டக்குறிச்சி சேங்கல்மலையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பழங்களால் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து துளசி, வெற்றிலை ஆகியவற்றில் மாலைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்து, வெள்ளிகவசம் அணிவித்து, வடைமாலை சாத்தப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி கழுத்தில் இருந்த வடைமாலை எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆஞ்சநேயர் கோவில்களிலும் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story