கன்னியாகுமரியில் தொடர் மழை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி,
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. மலையோரம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பரக்காணி - வைக்கல்லூர் இடையே கட்டப்பட்ட தடுப்பணையை தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது.
மேலும், விவசாய நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விட்டதால், அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்கள் பாதிப்படைந்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.