மதுரையில் வீட்டில் வளர்த்த யானை மீட்பு


மதுரையில் வீட்டில் வளர்த்த யானை மீட்பு
x

மதுரையில் உரிய அனுமதி இன்றி வீட்டில் வளர்த்து வந்த யானையை இரவோடு இரவாக நடவடிக்கை எடுத்து வனத்துறையினர் மீட்டனர். ஆனால், அந்த யானை 4 மணி நேரமாக லாரியில் ஏற மறுத்து அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை,

கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. ஆனால், மதுரையில் சில வீடுகளில் வனத்துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதியோடு யானைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த வளர்ப்பு யானைகள் திருமணம், கோவில் விழாக்கள், சினிமா படப்பிடிப்பு உள்ளிட்டவைகளுக்கு செல்கின்றன.மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மாலா என்ற பெண்ணும், தனது வீட்டில் யானை வளர்த்து வந்தார். அது பெண் யானை ஆகும்.அந்த யானையை பராமரிக்க பாகன் ஒருவரையும் நியமித்திருந்தார். மாலா தனது யானையை சுபநிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வந்தார். இந்த நிலையில், அவர் உரிய அனுமதி இல்லாமல் யானை வளர்த்து வருவதாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசாமிக்கு தகவல் கிடைத்தது. அதுகுறித்து விசாரணை நடத்த வனத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவில் தல்லாகுளத்தில் உள்ள மாலாவின் வீட்டிற்கு சென்றனர். கால்நடை மருத்துவ குழுவினரும் சென்றிருந்தனர்.

விசாரணை

யானைக்கான ஆவணங்கள் குறித்து மாலாவிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த யானை உரிய ஆவணங்கள் இன்றி வளர்க்கப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து மாலாவிடம் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த யானைக்கு 22 வயது இருக்கும் எனவும், அந்த யானை பீகார் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும் தெரியவந்தது. அதிகாரிகள் கிடுக்கிப்பிடியாக விசாரித்த போது, யானைக்கான ஆவணங்கள் தொலைந்து விட்டதாகவும் மாலா தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, அந்த யானையை வனத்துறையினர் அங்கிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, மாலா எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பாகன் அங்கிருந்து நைசாக தப்பிச் சென்றுவிட்டார்.

மாற்று பாகன்

இதனையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு மாநகர போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். போலீசார் உதவியுடன் யானையை வனத்துறையினர் மீட்க முயன்றனர். ஆனால், பாகன் இல்லாததால் யானையை லாரியில் ஏற்றுவது சிரமத்தை ஏற்படுத்தியது.

யானை லாரியில் தொடர்ந்து ஏற மறுத்து அடம்பிடித்தது. இரவோடு இரவாக யானையை லாரியில் ஏற்றுவதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர்.

அதன்பின்னர், மாற்று பாகன் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் யானை ஏற்றப்பட்டது. இதையடுத்து மதுரையில் இருந்து திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு யானை கொண்டு செல்லப்பட்டது.


Next Story