கணவன்-மனைவி வெட்டிக்கொலை: மகளின் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு


கணவன்-மனைவி வெட்டிக்கொலை: மகளின் காதலனுக்கு போலீசார் வலைவீச்சு
x

சென்னை குரோம்பேட்டையில் கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மகளின் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). பூ வியாபாரி. இவருடைய மனைவி மஞ்சுளா (45). இவர்களுக்கு ராஜேஷ் என்ற மகனும், வசந்தி, அமுலு என 2 மகள்களும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இவர்களில் வசந்தி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக தனது மகள் மற்றும் மகனுடன் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மற்றொரு மகள் அமுலு, மாங்காட்டில் கணவருடனும், ராஜேஷ் ஜமீன் ராயப்பேட்டை பகுதியில் மனைவியுடனும் தனியாக வசித்து வருகின்றனர்.

தனியாக வசிப்பு

வசந்திக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலமாக சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மோசஸ் (35) என்பவர் அறிமுகமானார். அதன்பிறகு இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. மோசஸ் அடிக்கடி வசந்தியின் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து வந்தார். இவர்களது பழக்கம் குறித்து வசந்தியின் பெற்றோருக்கு தெரிந்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து மோசஸ், வசந்தியுடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்த திட்டமிட்டார். அதன்படி மோசஸ், அதே பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் முதல் தெருவில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசந்தியுடன் தனியாக வசித்து வந்தார். மோசஸ் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து அடிக்கடி வசந்தியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேஷ், தனது பெற்றோரை பார்க்க சென்றார். அங்கு அவர்கள் இல்லாததால் பிள்ளையார் கோவில் முதல் தெருவில் உள்ள மோசஸ் வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு தனது தந்தை ஆறுமுகம் மற்றும் தாய் மஞ்சுளா இருவரும் ெவட்டிக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இருவரது தலை, கழுத்து, முகம், தொடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் இருந்தன. இதுபற்றி தகவல் அறிந்துவந்த சிட்லபாக்கம் போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். அதில் 30-ந்தேதி இரவு மோசஸ் மற்றும் 2 பேர் மோட்டார்சைக்கிளில் அந்த வீட்டுக்கு வந்து செல்வதுபோன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

மிரட்டல்

கடந்த 30-ந்தேதி வசந்தி, தனது குழந்தைகளோடு மாங்காடு பகுதியில் உள்ள அவரது சகோதரி அமுலு வீட்டுக்கு சென்றுவிட்டார். அன்று இரவு மோசஸ் வசந்தியை செல்போனில் தொடர்பு கொண்டு, "உடனடியாக வீட்டுக்கு வா. இல்லை என்றால் உனது பெற்றோரை கொன்று விடுவேன்" என மிரட்டினார். ஆனால் வசந்தி, அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இணைப்பை துண்டித்துவிட்டார்.

அதன்பிறகு 2 நாட்களாக வசந்தி தனது பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வசந்தி, அதே பகுதியில் வசிக்கும் தனது சகோதரர் ராஜேசுக்கு தகவல் தெரிவித்து வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி ராஜேஷ் அங்கு சென்று பார்த்தபோதுதான் தனது பெற்றோர் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது.

கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு

தான் அழைத்தும் வசந்தி வராததால் ஆத்திரம் அடைந்த மோசஸ், 30-ந்தேதி இரவு அவரது பெற்றோரை தனது வீட்டுக்கு வரும்படி அழைத்தார். மோசசுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தும் பழக்கம் கொண்ட ஆறுமுகமும் அவர் அழைத்ததும் தனது மனைவி மஞ்சுளா உடன் மோசஸ் வாடகைக்கு குடியிருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் சேர்ந்து மது அருந்தினர்.

பின்னர் மோசஸ், ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா இருவரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்து இருந்தது. இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கும் என்பதால் அவர்களது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

தலைமறைவான மோசஸ் உள்பட 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story