வெளிநாட்டில் இருந்து முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டரூ.3½ கோடி கொட்டைப்பாக்கு பறிமுதல்


வெளிநாட்டில் இருந்து முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டரூ.3½ கோடி கொட்டைப்பாக்கு பறிமுதல்
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)

வெளிநாட்டில் இருந்து முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான கொட்டைப்பாக்கை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

வெளிநாட்டில் இருந்து முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ.3½ கோடி மதிப்பிலான கொட்டைப்பாக்கை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கண்காணிப்பு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகம் வழியாக தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அதிகாரிகள் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வந்த சரக்கு பெட்டகங்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, துபாயில் இருந்து வந்த ஒரு சரக்கு பெட்டகத்தில் கால்நடை தீவனம் என்றும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒரு சரக்கு பெட்டகத்தில் பார்லி அரிசி என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ரூ.3½ கோடி

இதனால் சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த 2 சரக்கு பெட்டகங்களையும் சோதனை செய்தனர். அப்போது, அந்த சரக்கு பெட்டகங்களில் மொத்தம் 23 டன் கொட்டை பாக்கு இருந்தது. கொட்டை பாக்கு இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், 100 சதவீதம் வரி செலுத்தி கொண்டு வர வேண்டும். இதனால் வரி்ஏய்ப்புக்காக ஏமாற்றி கொண்டு வரப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3½ என்று கூறப்படுகிறது.

சென்னை பிரமுகரிடம் விசாரணை

இதைத் தொடர்ந்து மத்தியவருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 23 டன் கொட்டைபாக்கையும் பறிமுதல் செய்தனர். இதனை இறக்குமதி செய்த சென்னையை சேர்ந்த பிரமுகர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொட்டைபாக்கு, போதை பாக்குகள் தயாரிப்பதற்காக கொண்டு வரப்பட்டதா, முறைகேடாக இறக்குமதி செய்தவர்கள் யார் என்பது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story