சிதம்பரத்தில் வயிற்றில் துணியை வைத்து கர்ப்பிணி போல் நடித்த இளம்பெண் பிரசவம் பார்க்க அழைத்து சென்ற டாக்டர்கள் அதிர்ச்சி


சிதம்பரத்தில் வயிற்றில் துணியை வைத்து கர்ப்பிணி போல் நடித்த இளம்பெண்  பிரசவம் பார்க்க அழைத்து சென்ற டாக்டர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 5 Nov 2022 7:38 PM GMT (Updated: 7 Nov 2022 5:38 AM GMT)

சிதம்பரத்தில் வயிற்றில் துணியை வைத்து கர்ப்பிணி போல் இளம் பெண் ஒருவர் நடித்தார். அவரை பிரசவம் பார்க்க டாக்டர்கள் அழைத்து சென்ற போது இந்த தகவலை அறிந்து அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

கடலூர்

சிதம்பரம்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இளம்பெண் 2 முறை கர்ப்பமானார். ஆனால், கரு வயிற்றில் தங்காமல் கலைந்து போனது.

இதற்கிடையே தற்போது 3-வது முறையாக அவர் கருவுற்றார். இந்த நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்க சென்றுவிட்டார். ஆனால், 3-வது முறையும் அவரது குழந்தைக்கான ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. அந்த கருவும் கலைந்து போனதால், என்ன செய்வது என்று தெரியாமல் அந்த பெண் பரிதவிப்புக்கு ஆளானார்.

தனது கணவரின் குடும்பத்தினருக்கு தெரிந்தால், தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று எண்ணி பயந்துள்ளார்.

மாமியாரை கண்டு பயம்

இதனால், தனது வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கடந்த 9 மாதங்களாக கர்ப்பிணி போல் நடித்துள்ளார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து வருவதாகவும் வீட்டில் கூறி சென்று வந்தார்.

தற்போது, குழந்தை பிறப்பதற்கான நேரம் வந்து விட்டதாக கூறி, பிரசவம் பார்க்க சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு, இளம்பெண்ணை அவரது தந்தை மற்றும் தாய், மாமியார் ஆகியோர் நேற்று அழைத்து வந்தனர்.

அங்கு டாக்டர்கள், அந்த பெண்ணை அழைத்து சென்று 'ஸ்கேன்' பரிசோதனை செய்ய பார்த்தனர். அப்போது அந்த பெண், தான் கருத்தரிக்கவில்லை, எனது வயிற்றில் துணியை வைத்து ஒன்பது மாதமாக கர்ப்பிணி போல் வீட்டில் நடித்து வந்தேன்.

3 முறை நான் கருத்தரித்தும், அது நிலைக்காமல் போய்விட்டது. இதனால் குடும்பத்தில் உள்ள மாமியார், உறவினர்கள் என்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று பயந்து கர்ப்பிணி போல் நடித்தேன் என்று கூறியுள்ளார்.

டாக்டர்கள் அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், உங்களது குடும்பத்தினரிடம் நிலைமையை எடுத்து கூறுவதாக கூறி அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினர். இதற்கிடையே வெளியே வந்த பெண், தனது குடும்பத்தினரிடம் நான் கழிவறைக்கு செல்லும் போது குழந்தை கீழே விழுந்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர்கள் டாக்டர்களிடம் சென்று முறையிட்டனர். அப்போது தான் அவர்கள் நடந்த சம்பவத்தை அவர்களுக்கு விளக்கி கூறினார்கள்.

தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், மகளிர் போலீசார் நேரில் சென்று அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்கினர். மேலும் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடமும் உரிய அறிவுரைகளை கூறி, அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Next Story