மதுரையில், ரெயில் மறியலுக்கு முயன்ற பெண்கள் உள்பட 80 பேர் கைது

பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜ.க. எம்.பி. மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரையில் ரெயில் மறியலுக்கு முயன்ற பெண்கள் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரெயில் மறியல்
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா, சாக்சி மாலிக் மற்றும் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதத்திற்கும் மேல் வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மதுரையில் நேற்று ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாதர் சங்க நிர்வாகி பொன்னுத்தாய், சசிகலா, மாணவர் சங்க செயலாளர் பாலா உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே கூடினார்கள். பின்னர் அவர்கள் ஊர்வலமாக ரெயில்நிலையம் நோக்கி சென்றனர். இதையொட்டி ரெயில் நிலையம் முன்பு போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ரெயில் மறியலுக்கு செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர்.
80 பேர் கைது
இதனால் அவர்கள் ரெயில்நிலையம் எதிரே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் எம்.பி. உருவபொம்மைக்கு செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர். அதனை போலீசார் தடுத்து நிறுத்தி, மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் மறுத்ததால், போலீசார் மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 80 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.