மதுரையில் பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர் - பரபரப்பு தகவல்கள்


மதுரையில் பயங்கரம்: தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்ற கணவர் - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 4 April 2024 3:05 AM GMT (Updated: 4 April 2024 5:22 AM GMT)

பெட்ரோலை ஊற்றி மனைவியை அவரது கணவர் எரித்துக்கொன்றார்.

மதுரை,

மதுரை பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஈசுவரன். இவருடைய மகள் மகேசுவரி (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சுந்தரமூர்த்தி (31) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்தநிலையில், கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர், உறவினர்கள் சமாதானம் செய்ததால், இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமானது. பின்னர் சுந்தரமூர்த்தி ஆத்திரத்தில் வெளியே சென்றுள்ளார்.

மதியம் மகேசுவரி வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது சுந்தரமூர்த்தி அங்கு வந்தார். மனைவி மீதான ஆத்திரம் தணியாத அவர், அவரை கொல்ல துணிந்தார்.

சத்தம் ஏதும் வராதவாறு நைசாக பெட்ரோல் கேனை எடுத்து வந்து மகேசுவரி மீது ஊற்றினார். இதனால் திடுக்கிட்டு எழுந்த மகேசுவரி கணவரிடம் இருந்து தப்ப போராடினார். ஆனால், அவரை மீண்டும் கீழே தள்ளி பெட்ரோலை ஊற்றியதுடன், ஈவு இரக்கமின்றி கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்துள்ளார். இதனால் மகேசுவரி அலறி துடித்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் சுந்தரமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தீயை போராடி அணைத்து மகேசுவரியை மீட்டனர். ஆனால், அதற்குள் உடல் கருகி பலத்த காயம் அடைந்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை, திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 80 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு போராடிய மகேசுவரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மனைவியை உயிரோடு எரித்துக்கொன்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சுந்தரமூர்த்தியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

மனைவியுடனான குடும்ப தகராறில்தான் இந்த கொலை நடந்து இருப்பதாகவும், இருந்தாலும் வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story