நஞ்சைபுளியம்பட்டியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


நஞ்சைபுளியம்பட்டியில்  நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்;  விவசாயிகள் கோரிக்கை
x

நஞ்சைபுளியம்பட்டி யில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

நஞ்சைபுளியம்பட்டி யில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்காலிகமாக...

டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி, புஞ்சைதுறையம்பாளையம் பகுதிகளில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது. பெரும்பான்மையான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை அரசு நேரடியாக தற்காலிக கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் இவை களிமண் தரை கொண்ட களங்களாக உள்ளது.

சேறும், சகதியுமாக...

இதனால் விவசாயிகள் கொட்டிய நெல் மணிகள் மழை காலங்களில் நீர் சூழ்ந்து சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் நெல் மணிகள் ஈரப்பதம் குறையாமல் இருப்பதினால் கொள்முதல் செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.

இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது, எனவே சிமெண்ட் களத்துடன் கூடிய நிரந்தர கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர கொள்முதல் நிலையம்

இந்த நிலையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7லட்சத்து 5 ஆயிரம் மதிப்பீட்டில் நஞ்சைபுளியம்பட்டி ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, 'நஞ்சைபுளியம்பட்டி ஊராட்சியில் வருவாய் துறைக்கு உள்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த இடம் முழுவதும் சிமெண்ட் களம் அமைத்து அதை நிரந்தர கொள்முதல் நிலையமாக அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.


Next Story