வடமாவட்டங்களில் ரூ.6,500 கோடி மதிப்பில் காவிரி நீர் கொண்டுவர திட்டம் நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் கேஎன்நேரு பேட்டி


வடமாவட்டங்களில்  ரூ.6,500 கோடி மதிப்பில் காவிரி நீர் கொண்டுவர திட்டம்  நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் கேஎன்நேரு பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வடமாவட்டங்களில் ரூ.6,500 கோடி மதிப்பில் காவிரி நீர் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நிதி வந்தவுடன் இத்திட்ட பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நகராட்சி நிர்வாகத்துறை வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது.

கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.என்.நேரு, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 2024-ம் ஆண்டு மே மாதத்தில் முடிக்கப்படும். இப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 10 ஆண்டுகாலம் ஆகிவிட்டது. ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்தவர்கள் அப்பணியை சரிவர முடிக்கவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு இருக்கின்ற ஒப்பந்ததாரர்களை அணுகி அப்பணிகளை முடுக்கி விட்டதன் விளைவாக தற்போது 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. மீதம் இருக்கிற பணிகளை விரைவாக முடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். ஏற்கனவே பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக சாலைப்பணிகள் மேற்கொள்ள முதல்கட்டமாக ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் சாலைப்பணிகள் முடிக்கப்படும்.

மாநகராட்சியாக தரம் உயர்த்த...

சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட பகுதிகளில் ஊழியர்களுக்கு எங்கும் ஊதிய நிலுவை கிடையாது. ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எந்தெந்த இடத்தில் நகராட்சிகளில் அதிகாரிகள் பற்றாக்குறை இருக்கிறதோ அங்கு அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. வெகு விரைவில் அதிகாரிகள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

விழுப்புரம் போன்ற நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த 5 லட்சத்தில் இருந்து 7 லட்சம் வரை மக்கள் தொகை இருக்க வேண்டும். நகராட்சியில் இப்போது பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 5 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை இருக்குமானால் அதைப்பற்றி சிந்திக்கலாம். முதல்-அமைச்சரின் அனுமதிபெற்று அதுபற்றி பார்க்கப்படும். நகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் பணிகளை நிறைவேற்றுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

காவிரிநீர் திட்டம்

காவிரி நீர் மூலம் வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, திருவண்ணாமலை மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு பகுதி, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் பயன்பெறும் வகையில் ரூ.6,500 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நிதிக்காக உலக வங்கி, ஜெர்மன் வங்கிக்காக காத்திருக்கிறோம். நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story