சங்கராபுரத்தில் பிளஸ்-2 மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு 2 பேர் கைது


சங்கராபுரத்தில் பிளஸ்-2 மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 Oct 2022 6:45 PM GMT (Updated: 13 Oct 2022 6:46 PM GMT)

சங்கராபுரத்தில் பிளஸ்-2 மாணவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே உள்ள காட்டுவன்னஞ்சூரை சேர்ந்தவர் துரை மகன் இளவரசன் (வயது 17). இவர் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் சங்கராபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி மெயின் ரோடு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி இளவரசனிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மூரார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மறித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கள்ளக்குறிச்சி தாலுகா, புக்கிரவாரியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யப்பன் (வயது 23) மற்றும் 16 வயது சிறுவன் என்பதும், இளவரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பன் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்த போலீசார், செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை செஞ்சி சீர்திருத்த பள்ளியில் சேர்க்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story