'புரவாங்கார' ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரி சோதனை


புரவாங்கார ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
x

சென்னையில் உள்ள ‘புரவாங்கார’ ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை,

பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு சென்னை, ஐதராபாத், கோவை, மங்களூரு, கொச்சி, மும்பை, புனே, கோவா உள்ளிட்ட 9 இடங்களில் 'புரவாங்கார' ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நிலங்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், வருமானத்தை முறையாக வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்து மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக இந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, இந்தநிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்தவகையில், சென்னை, அடையாறில் உள்ள எம்.ஆர்.சி. நகரில் உள்ள அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

ஆவணங்கள் பறிமுதல்

நாடு முழுவதும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனை தொடர வாய்ப்பு உள்ளதால், முழுமையாக முடிந்த பிறகே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணம், நகைகள் இவற்றின் மொத்த மதிப்பு எவ்வளவு என்று ஓரிரு நாட்களில் தெரியவரும்.

வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின் பேரில் இந்த நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்று வருமான வரித்துறை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.


Next Story