மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு


மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு
x

மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் துயரினை களைந்திட 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 - வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக அரசு வழங்கி வருகிறது.

அத்தொகையினை உயர்த்தி வழங்கிடக் கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் துயரினை போக்கிடும் வகையில் 18.08.2023 அன்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2024-25 ஆம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக 22.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story